மருசலின் பியூஸ்லஸ் என்பவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்தவர், 12.10.1986ஆம் ஆண்டு மன்னாரில் நடந்த மோதலில் வீரச்சாவடைந்த ஒரு முக்கிய தளபதி ஆவார். இவர் 1963 இல் பனங்கட்டிக்கொட்டு என்னும் இடத்தில் பிறந்து, மன்னார் புனித சவேரியார் கல்லூரியில் கல்வி பயின்றவர். விக்ரர் என்ற பெயருடன் மன்னார் மாவட்ட தளபதியாக செயற்பட்டவர்.
மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர்.
விடுதளைப்போராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம். இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவாரக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்ளதபதிகளை தமிழினம் மறக்காது.
விடுதலைப் பயிரானது ஆதிக்க பாதங்களினால் மிதிபட்டுப் போய்விடுமோ, பேரினவாதிகளின் பெருமூச்சினில் கருகிவிடுமோ என்ற ஏக்கம் நிறைந்த காலங்களிலெல்லாம் தலைவருக்குப் பக்க பலமாக நின்று விடுதலைப் பயிரை உரமிட்டுப் பாதுகாத்துத் தந்த மூத்த தளபதிகளை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.
விடுதலைப்புலிகள் இராணுவ அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவோ அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு விலைபோகக்கூடியவர்களோ அல்லர் என்பதை மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றினூடாக சர்வதேச சமூகத்துக்கு சத்தியம் செய்து கொடுத்த சாதனையாளன் தளபதி விக்ரர். 12,10.1986 அன்று மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதி சூற்றிவளைக்க வந்த நூற்றுக்கணக்கான சிங்களப்படையினரை எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைக் கொண்டு முற்றிலும் பாதகமான சூழ்நிலையிலும். அதிகாலை வேளையிலும் “இரண்டில் ஒன்று, ஒன்று அவன் அல்லது நாங்கள்” என்ற துணிவு மிகுந்த வார்த்தைகளை எங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களூடாக வழங்கிவிட்டு களத்திலே நேரில் இறங்கி வியூகம் அமைத்து, ஊடறுத்து, சிதைத்து, சடலங்கள் ஆயுதங்களை அள்ளி, சிறைபிடித்து என்றவாறு தாக்குதலை நகர்த்தி ”ஓட விடாதே”, “பார்த்துப் பார்த்து விழுத்து”, “ஹெலியை இறக்கவிடாதே”, இறங்கிய ஹெலியை பறக்கவிடாதே” என்றெல்லாம் தனது சுடுவிரல் அசைவினால் நெறிப்படுத்தி நின்ற வெற்றிகரமான சூழ்நிலையின் இறுதிக் கணத்தில் தளபதி விக்டரின் தொடர்பை இழந்து நின்ற அன்றைய சோகம் நிறைந்த நினைவுகளை பகிர்வதில் மனம் நிறைவடைய மறுக்கிறது.
சிறிலங்காப் படையினரை சிறைப்பிடித்தும், படையினரின் சடலங்களை மீட்பதும் தமிழ்மக்கள் மத்தியில் மெல்லமெல்ல துளிர்விட்ட விடுதலைப் போராட்டம் மீதான நம்பிக்கையினை மேலும் பலபடிகள் பாய்ந்து செல்லவைத்த அற்புத நிகழ்வாகவே தளபதி விக்ரர் தலைமையிலான அன்றைய தாக்குதல் சம்பவம் அமைந்திருந்தது.
1983ம் ஆண்டு யாழ் திருநெல்வேலியில் சிங்களப் படையினருக்கு எதிரான கண்ணிவெடித் தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகித்த தளபதி விக்ரர் அவர்கள் தமிழீழப் பகுதியில் தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிலும் பங்குபற்றியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத் தகர்ப்பின் பொது பாதகமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது எமது அணியினை நகர்த்தி இடையில் ஒன்று கூட்டி ஒழுங்குபடுத்தி மீண்டும் வேகமாய் நிதானமாய் நகர்த்தி “ராதா ஸ்ராட்”, “குமரன் ஸ்ராட்” (லெப். கேணல் குமரப்பா) என்று ஆரம்பக் கட்டளைகளை அணித்தலைவர்களுக்கு வழங்கி குறுகிய நேரத்தில் போலிஸ் நிலையத்தை வெற்றி கொண்டு ஒரே ஒரு போராளியின் வீரச்சாவுடன் ஏனையோரை கடல் கடந்து பத்திரமாக கரைசெர்ப்பது வரையில் தளபதியின் வழிகாட்டல் என்பது மறக்கமுடியாத நினைவாகி நிற்கிறது. அன்றைய வெற்றிகரத் தாக்குதலை பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கும் போது விடுதலைப்புலிகளின் மதிநுட்பமும், துணிவும் நிறைந்த வெற்றிகரத் தாக்குதல் என வர்ணித்தார்.
மன்னார் மக்கள் அன்றைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தளபதி விக்ரருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து கௌரவித்தனர். பெரும் மகிழ்வுடன் மக்களை வரவேற்கும் பண்பு. நிமிர்ந்து உயர்ந்த அழகிய தோற்றம், அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய அன்றைய நாட்கள் மறக்க முடியாதவை.
விடுதலை இயக்கம் பிரசவித்த அக்கினி குஞ்சு என்பது மகளிர் படையணியின் வளர்ச்சி பற்றி எமது தலைவரின் வாக்கிற்கு உயிர் கொடுத்த தளபதியாக விக்டர் அன்று செயல்ப்பட்டார். பெண் போராளிகளுக்கு முதன் முதல் களம் கற்றுக்கொடுத்து இன்று வியக்க வைக்கும் வளர்ச்சியை பெற்று நிற்கும் எமது விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் மூத்த சகோதரனாகவே திகழ்ந்தார்.
தனது சிறந்த நிறைவான குரல்வளத்தால், பாடும் திறமையால் போராளிகளின் மனதை மற்றுமொரு கோணத்தில் இடம்பிடித்தும் தளபதி விக்டருக்கு இருக்கும் இன்னும் ஒரு சிறப்பு அம்சம்.
கைத்துப்பாக்கியை அழகாக கழற்றி குறிதவறாது சுட்டுக்காட்டி, கமராவை கையாள்வதும், கலையை ரசிப்பதும் இயற்கையிலேயே அழகுணர்ச்சியுடன் பழகிவந்த தளபதி அவர்கள் எமது தலைவரால் வளர்க்கப்பட்டவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம்.
இன்று எமது விடுதலைப் போராட்டமானது ஆயிரம் படையினரை ஒரே நாளில் களத்திலிருந்து அப்புறப்படுத்திய வரலாற்று வளர்ச்சியை பெற்று நிற்பதை உற்று நோக்கும் போது மிகுந்த பக்குவத்துடன் எமது தாயக விடுதலைப்பயணம் நகர்ந்து செல்வதை இலகுவில் இனங்கண்டு கொள்ளமுடிகிறது.
இன்றும் அன்றும் எமது தலைவர் அவர்களின் நேர்த்தியான வழிகாட்டலினால் மிக மிக உன்னத நிலையை எமது போராட்டம் சந்தித்து நிற்கிறது என்பது தெளிவாகின்றது.
என்றுமில்லாதவாறு எழுச்சி கொண்டு எமது மக்கள் நிற்கும் இவ்வேளையில் தாயகப்பற்றுணர்வுடன் ஆயிரம் ஆயிரம் விக்ரர்கள் புதிது புதிதாக எழுந்து வரவேண்டும்.
நன்றி: சூரியப் புதல்வர்கள் – 2004














