கேணல் கிட்டு விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராவார். இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இலங்கையின் வல்வெட்டித்துறையில் சனவரி 2, 1960 ஆம் ஆண்டு சதாசிவம், ராஜலட்சுமி இணையர்க்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடைய தாயார் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்னும் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினர் ஆவார். கிட்டு, 1991 ஆம் ஆண்டு கொழும்பில் போர் நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.
போராட்ட வரலாறு
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 அன்று நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கியப் பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9தில் போரினால் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதியானவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் குவேக்கர்ஸ் இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்.
















