யாழ்ப்பாணம் மண்கும்பான் என்னும் இடத்தில் துரைசிங்கம் என்பாரின் புதல்வியாக புஸ்பகலா என்ற இயற்பூண்ட இவர் 10 மே 1973ஆம் ஆண்டு பிறந்து யுத்த சூழலால் இடம்பெயர்ந்து கொக்குவில், மேற்கு – யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் வாழ்ந்து வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் முதல் பெண் கரும்புலி (தற்கொலை குண்டுதாரி) ஆவார்.
விடுதலைப் புலிகளுடன் இணைந்த காலம்
கேணல் கிட்டுவும் அவரின் தோழர்களும் மரணமடைந்த நாளில் விடுதலைப் போராட்டத்தில் இவர் இணைந்தார்.
பயிற்சிகளும், பணிகளும், சாதனைகளும்
இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.
விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார்..
எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின் போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கயற்கண்ணி ஆகஸ்ட் 16, 1994 அன்று; யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார். இவர் வெடித்த வெடியோசை யாழ் குடா நாட்டில் பல மைல்கள் தொலைவிற்கு மிக அதிர்வுடன் ஒலித்தது.

