திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா 29 நவம்பர் 1963ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராகவும், முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவார். தமிழீழம், யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப் போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நேரத்திலும், உறுதியுடன் அந்த உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.[2][3][4][5][6] திலீபனை இந்திய அரசு இறக்க விட்டது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் – இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இவரின் மறைவிற்குப் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை இவருக்கு வழங்கப்பட்டது.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் வீரமரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
எதிர்வினைகள்
திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்குக் கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்களச் சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கை கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன.

